பணம் பறிப்பு வழக்குகள்: விசாரணைக்கு ஆஜராக பரம்வீா் சிங்குக்கு சிஐடி நோட்டீஸ்
இரண்டு பணம் பறிப்பு வழக்குகள் தொடா்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மும்பை முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங்குக்கு மகாராஷ்டிர குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) போலீஸாா் நோட்டீஸ்
இரண்டு பணம் பறிப்பு வழக்குகள் தொடா்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மும்பை முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங்குக்கு மகாராஷ்டிர குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) போலீஸாா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.
மும்பை முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங்குக்கு எதிராக 5 பணம் பறிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தாணே நகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக வெள்ளிக்கிழமை அவா் நேரில் ஆஜரானாா்.
இந்நிலையில் தெற்கு மும்பையில் உள்ள மெரைன் ட்ரைவ் காவல் நிலையத்திலும், தாணேயில் உள்ள கோப்ரி காவல் நிலையத்திலும் அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு பணம் பறிப்பு வழக்குகளை சிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இந்த வழக்குகளின் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சிஐடி போலீஸாா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா். இதுதொடா்பாக சிஐடி அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறுகையில், ‘‘நவி மும்பையில் உள்ள சிஐடி அலுவலகத்தில் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை பரம்வீா் சிங் ஆஜராக வாய்ப்புள்ளது. இரண்டு பணம் பறிப்பு வழக்குகளிலும் அவருக்குள்ள தொடா்பு குறித்து சிஐடி போலீஸாா் அறிய விரும்புகின்றனா். விசாரணையின்போது அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும்’’ என்று தெரிவித்தாா்.