முகப்பு
இந்தியா

கரோனா காலத்தில் குழந்தைகளின் மன ஆரோக்கியம் பாதிப்பு: மத்திய அமைச்சர் மாண்டவியா

குழந்தைகளின் மனநிலையில் கரோனா நோய்த்தொற்று குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக "யுனிசெப்' நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:18 AM
பகிர்:

குழந்தைகளின் மனநிலையில் கரோனா நோய்த்தொற்று குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக "யுனிசெப்' நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக மத்திய சுகாதாரம், குடும்ப நலன், ரசாயன, உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
 "என் மனதில்: குழந்தைகளின் மன ஆரோக்கியம் மேம்படுத்துதல், பாதுகாத்தல், அக்கறைகொள்ளுதல்' எனும் 2021-ஆம் ஆண்டு உலக குழந்தைகள் நிலை குறித்த யுனிசெப்பின் உலகளாவிய முதல் பதிப்பை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுப் பேசியதாவது:
 முழுமையான ஆரோக்கியம், நல்வாழ்வை நமது பாரம்பரிய மருத்துவமுறைகள் வழங்கினாலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மனநலப் பிரச்னைகள் அதிகரித்து வருவது சிக்கல் நிறைந்தது. விவசாயப் பின்னணியைக் கொண்ட கிராமப்புற கூட்டுக் குடும்ப அமைப்புகளில் உள்ள குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் அதிக அளவில் பிற குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டாலும் மாற்று வழி கிடைக்கும். சில சமயங்களில் பெற்றோர்களிடம் அணுக முடியாத நிலையிலும் கூட மற்ற உறுப்பினர்களிடம் இருந்து இந்தக் கூட்டுக் குடும்ப நிலையில் வழிகாட்டுதல்கள் கிடைக்கின்றன. தனிக் குடித்தனங்களின் காரணமாக தனிமையுணர்வு அதிகரித்து மனநல பாதிப்பு அதிகரித்து வருகிறது.
 குழந்தைகளின் மன நலனில் கொவைட்-19 நோய்த் தொற்று குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக யுனிசெப்பின் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் மனஅழுத்தத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக இரண்டாவது அலை இந்த அனுபவத்தை நமக்கு வழங்கியது. இதற்குத் தேவையான மருந்துகளின் உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டு, புதிய ஆலைகளை நிறுவுவதற்கான செயல்முறை துரிதப்படுத்தப்படும்.
 மனநலப் பிரச்னைகளுக்கு பெற்றோர்கள், குடும்பத்தினர் ஆகியோருடன் ஆசிரியர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றனர். குடும்பத்தினரும் ஆசிரியர்களும் பரஸ்பர நம்பிக்கையுடன் குழந்தைகளுக்கு வெளிப்படையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். தேர்வுகளில் மன அழுத்தத்துக்குள்ளாகும் குழந்தைகளுக்கு "பரீக்ஷô பே சார்ச்சா' நிகழ்ச்சிகளை பிரதமர் நடத்தினார். பிரச்னையை பரந்த அளவில் எதிர்கொள்வதற்கு அரசின் அர்ப்பணிப்பாக பிரதமர் இதை மேற்கொண்டார் என்றார் மன்சுக் மாண்டவியா.
 இந்த நிகழ்ச்சியில் பேசிய யுனிசெஃப் அமைப்பின் இந்திய பிரதிநிதி டாக்டர் யாஸ்மின் அலி ஹக், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்களை முன்வைத்தார். இந்தியாவில் 15 முதல் 24 வயதுக்குள்பட்டவர்களில் 14 சதவீதம் அல்லது 7 பேர்களில் ஒருவர் அடிக்கடி மனச் சோர்வடைகிறார்கள். அல்லது தங்கள் விஷயங்களில் சிறிதும் ஆர்வம் காட்டாது உள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது. "குழந்தைகள் சோகத்தில் வாழ்வது மட்டுமல்ல, புறக்கணிக்கப்படும் மற்றும் துஷ்பிரயோக செய்யப்படும் ஆபத்தில் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments