உணவளித்தவர்களை கொன்ற நபரை கைது செய்யாதது ஏன்? பிரதமருக்கு பிரியங்கா காந்தி கேள்வி
எந்த வழக்கும் பதிவு செய்யாமல் 28 மணிநேரமாக தடுப்புக் காவலில் ஏன் வைத்துள்ளீர்கள் என பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சுட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
எந்த வழக்கும் பதிவு செய்யாமல் 28 மணிநேரமாக தடுப்புக் காவலில் ஏன் வைத்துள்ளீர்கள் என பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சுட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற காங்கிரஸின் பிரியங்கா காந்தி ஞாயிற்றுக் கிழமை இரவு விமானத்தில் லக்னௌ சென்றார். பின்னர் அங்கிருந்து காரில் லக்கிம்பூர் மாவட்டம் சென்ற அவரை பன்வீர் கிராமத்திதின் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து சீத்தாப்பூரில் விருந்தினர் இல்லத்தில் தடுப்புக் காவலில் கடந்த 28 மணிநேரமாக பிரியங்கா காந்தி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை பிரியங்கா வெளியிட்ட சுட்டுரை பதிவில்,
“உங்கள் அரசு கடந்த 28 மணிநேரமாக எந்த வழக்கும் பதிவு செய்யாமல் என்னை தடுப்புக் காவலில் வைத்துள்ளது. ஆனால், உணவளித்தவர்களை கொன்ற நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை ஏன்?” என மோடியை டேக் செய்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த பாஜகவினரின் வாகனங்கள் மீது கல்வீச்சு நடைபெற்றதாகவும், இதனால் கார்கள் நிலைதடுமாறி விவசாயிகள் மீது மோதியதாகவும் பின்னர் ஆத்திரமடைந்த விவசாயிகள், பாஜகவினரின் வாகனத்துக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த வன்முறையில் விவசாயிகள் 4 பேர், பாஜகவினர் 4 பேர் உள்பட 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த வன்முறைச் சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.