போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
3 நாட்கள் காவல் முடிந்த நிலையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ஆர்யன் கானை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மும்பை-கோவா சென்ற சொகுசுக்கப்பலில் நடந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்ளிட்டோரை பிடித்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அக்டோபர் 2-ஆம் தேதி விசாரணை மேற்கொண்டனர்.
சுமார் 20 மணிநேர விசாரணைக்குப் பின் ஆர்யன்கான், அர்பாஸ் செத் மெர்ச்சன்ட், முன்முன் தாமெக்கா ஆகியோரை மும்பை போலீஸ் கைது செய்து, கடந்த 4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
அப்போது ஆர்யன்கான் உள்பட 3 பேரை ஒருநாள் காவலில் விசாரிக்க மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதியளித்து உத்தரவிட்டது. மேலும் அக்டோபர் 7-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
நீதிமன்றம் வழங்கிய அவகாசம் முடிந்த நிலையில், ஆர்யன் கான் உள்பட மூவரும் இன்று (அக். 7) மீண்டும் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.