கேரளத்தில் அக்டோபர் 19-ஆம் தேதிக்கு பிறகு மின் தடை ஏற்படும் என்று அம்மாநில மின்சாரத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி திங்கள் கிழமை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், தற்போது கேரள மாநிலம் மின் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. தேவை மற்றும் விநியோகத்துக்கு இடையிலான இடைவெளியை சரிசெய்யும் வகையில் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.
இந்நிலையில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், நிலக்கரித் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, தேசிய அனல் மின் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் நிலக்கரி தட்டுப்பாடால் ஏற்படும் மின் பற்றாக்குறை குறித்து ஆலோசனை நடத்தினார்.
தில்லியில் நிலக்கரி தட்டுப்பாட்டால் தீவிர மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனினும் மாற்று எரிசக்தி மூலம் மின் உற்பத்தி பற்றாக்குறையை சரிசெய்ய இயலும் என்று நிலக்கரி சுரங்கத் துறை தெரிவித்துள்ளது.