புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,313 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 181 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 26,579 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது, கடந்த மார்ச் மாதத்துக்குப் பின் பதிவாகும் குறைந்த தொற்று பாதிப்பாகும்.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் இன்று காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 14,313 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,39,85,920-ஆக உயா்ந்துள்ளது.
தொடர்ந்து 18வது நாளாக நாட்டில் கரோனா பாதிப்பு 30 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி வருகிறது.
26,579 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,33,20,057 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,14,900-ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 181 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,50,963 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 95.89 கோடியாக அதிகரித்துள்ளது.