புதிய நாடாளுமன்ற வளாக திட்டத்தில் மாற்றம்:மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் அமையும் பிரதமா், குடியரசு துணைத் தலைவரின் இல்லங்களுக்காக இந்தியா கேட் அருகே உள்ள பொழுதுபோக்கு இடத்தை மாற்றி பயன்படுத்தும் முடிவு
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் அமையும் பிரதமா், குடியரசு துணைத் தலைவரின் இல்லங்களுக்காக இந்தியா கேட் அருகே உள்ள பொழுதுபோக்கு இடத்தை மாற்றி பயன்படுத்தும் முடிவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியரசுத் தலைவா் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள ராஜபாதை அருகே புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
2019, செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி, 900 முதல் 1,200 எம்.பி.க்கள் அமரக் கூடிய வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் 2022 ஆகஸ்ட் மாதம் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தன்று திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா கேட் அருகே உள்ள பொழுது போக்கு இடங்களை மாற்றம் செய்து, புதிய நாடாளுமன்ற வளாகத்திலேயே பிரதமா், குடியரசு துணைத் தலைவரின் இல்லங்களுக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், சி.டி.ரவிகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.
அப்போது மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘பாதுகாப்பு காரணங்களுக்காக உயா் பாதுகாப்பு பகுதியான புதிய நாடாளுமன்றம் அருகே பொழுதுபோக்குப் பகுதி அமையாது’ என்றாா். அப்போது நீதிபதிகள், ‘அங்கிருக்கும் பொழுதுபோக்கு பகுதி வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்படுமா?’ என்று கேள்வி எழுப்பினா்.
இதுகுறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதையடுத்து, மூன்று நாள்களில் தாக்கல் செய்யப்படும் என்று சொலிசிட்டா் ஜெனரல் தெரிவித்தாா்.