இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி போப் பிரான்சிஸை சந்தித்ததன் மூலம் போப் ஆண்டவரை சந்திக்கும் 5ஆவது இந்தியப் பிரதமராகியுள்ளார்.
இத்தாலி பிரதமர் மரியோ டிராகியின் அழைப்பின்பேரில் ஜி - 20 மாநாட்டில் கலந்து கொள்தவற்காக இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி ரோமுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் வாடிகனில் உள்ள போப் பிரான்சிஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரதமர் மோடி போப் பிரான்சிஸை இந்தியாவிற்கு வர அழைப்பு விடுத்தார்.
இதற்கு முன்னரும்கூட இந்தியப் பிரதமர்கள் போப் ஆண்டவரை சந்தித்துப் பேசியுள்ளார். 1955ஆம் ஆண்டு ஜூலை மாதம் கோவாவை இந்தியாவுடன் இணைப்பதற்கு போர்த்துகீசியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தில் 20 பேர் பலியானதையடுத்து நேரு பொருளாதார தடையை விதித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக போப் உடனான தனது சந்திப்பில், கோவாவில் நடப்பது ஒரு அரசியல் பிரச்னை எனவும் மதப் பிரச்னை அல்ல எனவும் முன்னாள் பிரதமர் நேரு தெளிவுபடுத்தினார்.
இதையும் படிக்க | போப் ஆண்டவரை சந்தித்த பிரதமர் மோடி
அதேபோல் 1981ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி இரண்டாவது போப் ஜான் பாலை சந்தித்து பேசினார்.
அவரைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர்களாக இருந்த ஐ.கே.குஜ்ரால் 1997ஆம் ஆண்டும், அடல் பிகாரி வாஜ்பாய் 2000ஆம் ஆண்டிலும் அப்போதைய போப் ஆண்டவரை சந்தித்து பேசியுள்ளனர்.
நான்காவது போப் பால் முதன்முறையாக 1964ஆம் ஆண்டு சர்வதேச நற்கருணை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் மும்பைக்கு வருகை புரிந்தார். அவரைத் தொடர்ந்து போப் இரண்டாம் ஜான் பால் 1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமும், 1999ஆம் ஆண்டு நவம்பர் மாதமும் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார்.
போப் ஆண்டவர்களின் வருகையின் போது விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.