புதுதில்லி: நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் 18.6 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இது தடுப்பூசி திட்டத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாகும்.
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா சுட்டுரையில் புதன்கிழமை வெளியிட்ட காணொலியில், ‘‘நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவாக ஆகஸ்ட் மாதம் 18.6 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதில் ஆகஸ்ட் 21-27-ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் அதிகபட்சமாக 4.66 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. நாட்டின் மக்கள்தொகையில் தகுதிவாய்ந்த 50 சதவீதம் பேருக்கு தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்தும் இலக்கு ஆகஸ்ட் 26-ஆம் தேதி எட்டப்பட்டது. தகுதிவாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை ஹிமாசல பிரதேசம் பெற்றுள்ளது. அந்த இலக்கை ஆகஸ்ட் 29-ஆம் தேதி ஹிமாசல பிரதேசம் எட்டியது. நாட்டில் 90 சதவீத கரோனா தடுப்பூசி மையங்கள் அரசால் இயக்கப்படுகின்றன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.