தில்லி விமான நிலையத்தில் இன்று (செப்-3) ஸ்பைஸ்ஜெட் விமான ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பிரபல விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணிபுரியும் 150க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பள பிரச்னையால் தில்லி விமான நிலையத்தில் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கடந்த சில மாதங்களாக ஊழியர்களுக்கு முழுமையான சம்பளத்தை வழங்காமல் சில காரணங்கள் சொல்லி சம்பளம் பிடித்தம் செய்வதாகக் கூறி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பிரச்னை முடியும் வரை பணிக்குத் திரும்பப் போவதில்லை என தெரிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சார்பில் பேசியவர் ' இந்த வேலை நிறுத்தத்தால் விமானச் சேவைகள் எதுவும் நிறுத்தப்படவில்லை. 'ஏ'பிரிவு ஊழியர்களுக்கு சில பிரச்சனைகள் இருக்கிறது. மற்ற ஊழியர்கள் பணியில் இருக்கிறார்கள். மேலும் தலைமையிடத்தில் பேசி வேலைநிறுத்தம் வாபஸ் வாங்கப்படும்' எனத் தெரிவித்தார்.