கேரளத்தில் மேலும் இருவருக்கு நிபா அறிகுறி
கோழிக்கோட்டில் உள்ள இரண்டு மருத்துவ பணியாளர்களுக்கு நிபா வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
நிபா வைரஸ் காரணமாக உயிரிழந்தவருடன் தொடர்பில் இருந்த இரண்டு மருத்துவ பணியாளர்களுக்கு நிபா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இறப்பதற்கு முன்பு அவருடன் 188 பேர் தொடர்பில் இருந்துள்ளனர். அதில், 20 பேர் நிபாவால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
நிபா குறித்து நடத்தப்பட்ட உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், "கோழிக்கோட்டில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை பணியாளர் ஒருவருக்கும் தனியார் மருத்துவமனை பணியாளருக்கும் நிபா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிக்க | அச்சுறுத்தும் நிபா வைரஸ்; கேரளம் விரைந்த மத்தியக் குழு
நிபா வைரஸ் காரணமாக உயிரிழந்த 12 வயது சிறுவன் வெள்ளிக்கிழமை தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்பு, மூன்று மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு கரோனா தொற்று இருந்ததாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள வீணா, "புனேவில் உள்ள தேசிய கிருமியியல் மையத்திலிருந்து வரவுள்ள குழு, கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நிபா கண்டறியும் மையத்தை தொடங்கவுள்ளது" என்றார்.