ஷாஜஹான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் அருகே நௌகவா கிராமத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் ஒரு பெண்ணும், அவரது காதலரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாக காவலர்கள் கூறுகிறார்கள்.
வெள்ளிக்கிழமை காலை, பண்டி (22) என்ற பெண், தனது வீட்டின் இரண்டாவது தளத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில், சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது காதலர் ஆஷிஷ் (25) உடல் அந்த கிராமத்தின் சாலையொன்றில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
பண்டியை திருமணம் செய்து கொள்ள ஆஷிஷ் விரும்பியதாகவும், இதற்கு குடும்பத்தினர் மறுப்புத் தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இருவரது உடல்களையும் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆணவக் கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.