விவசாயிகளின் தண்ணீர் வரி மற்றும் மின்சாரக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என பஞ்சாபின் புதிய முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சரண்ஜீத் பேசியது,
“சாதாரண மனிதருக்கு முதலமைச்சராக பதவியை காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ளது. பஞ்சாப் அரசு எப்போதும் விவசாயிகளின் நலனுக்காக செயல்படும். மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மத்திய அரசிடம் முறையிடப்படும்.
விவசாயிகளின் தண்ணீர் வரி மற்றும் மின்சார கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும்.
முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மக்கள் நலனுக்கான பல பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்பணிகளை தொடர்ந்து முன்னோக்கி எடுத்துச் செல்வோம்.”
இதையும் படிக்க | பஞ்சாப் புதிய முதல்வராக பதவியேற்றார் சரண்ஜீத் சிங் சன்னி
பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தா் சிங்குக்கும், அமைச்சராக இருந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இந்நிலையில், அமரீந்தா் சிங்கின் எதிா்ப்பை மீறி சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக கட்சித் தலைமை கடந்த ஜூலை மாதம் நியமித்தது. அதன்பிறகு இருவருக்கும் இடையே மோதல் அதிகரித்தது. இந்தச் சூழலில், அமரீந்தா் சிங் தனது முதல்வா் பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
காங்கிரஸின் மேலிட உத்தரவையடுத்து பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி இன்று பதவியேற்றுக் கொண்டார்.