கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் புத்தடியில் உள்ள நறுமணப் பொருள் வாரியம் பூங்காவில் 30 நாள்களுக்குப் பிறகு சிறப்பு மின்னணு ஏலக்காய் ஏலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மத்திய அரசு 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை 75 வாரங்களாக ஆஜாதி கா அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில் ஒவ்வொரு துறை சார்பில் கொண்டாடி வருகிறது. இதனையொட்டி இந்திய நறுமணப் பொருள் வாரியம் சார்பில் இடுக்கி மாவட்டம் புத்தடியில் 30 நாள்களுக்குப் பிறகு மின்னணு ஏலக்காய் ஏலத்தை நறுமணப் பொருள் வாரிய தலைவர் ஏ.ஜி.தங்கப்பன் தொடங்கி வைத்தார்.
இதையும் படிக்க- நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 200 பேர் மன அழுத்தத்தில் உள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
வாரிய உறுப்பினர்கள் ஸ்டெனி போத்தன், டி.டி.ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வண்டன்மேட்டை சேர்ந்த ஹீடர் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம் சிறப்பு மின்னணு ஏலக்காய் வர்த்தகத்தை நடத்தி அதில் 75 ஆயிரம் கிலோ ஏலக்காய் விற்பனையானது. அதிகபட்ச விலையாக ஏலக்காய் கிலோவிற்கு 2,413 ரூபாய்க்கும், சராசரி விலையாக கிலோவிற்கு 1,128 ரூபாய்க்கு ஏலம் போனது.
ஏலக்காய் ஏலத்தில் தமிழ்நாடு, கேரளம் மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர். நிர்வாகி ரோஜன் சேவியர் நன்றி கூறினார். கரோனா தொற்று காரணமாக, புத்தியில் நிறுத்திவைக்கப்பட்ட ஏலக்காய் ஏலம் 30 நாள்களுக்குப் பிறகு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.