அமித் ஷாவைச் சந்தித்தது ஏன்? அமரீந்தரின் ஊடக ஆலோசகர் விளக்கம்
அமரீந்தர் சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாக அவரது ஊடக ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
அமரீந்தர் சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாக அவரது ஊடக ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 18-ம் தேதி முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, அவர் பாஜகவில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளிவந்தன. இதற்கு வலு சேர்க்கும் வகையில் அவரது தில்லிப் பயணம் அமைந்தது.
இதையும் படிக்க | அமித் ஷா இல்லத்தில் அமரீந்தர் சிங்!
எந்தவொரு அரசியல் தலைவரையும் சந்திக்கப்போவதில்லை என அமரீந்தர் சிங் செவ்வாய்க்கிழமை விளக்கமளித்திருந்த நிலையில், புதன்கிழமை மாலை அமித் ஷாவைச் சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்றார் அமரீந்தர் சிங்.
இந்த சந்திப்பு குறித்து அமரீந்தரின் ஊடக ஆலோசகர் தெரிவித்தது:
"மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தில்லியில் சந்தித்தார். நீண்ட காலமாக நடைபெற்று வரும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். வேளாண் சட்டங்களை ரத்து செய்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உறுதியளித்து பிரச்னையை உடனடியாகத் தீர்க்குமாறு வலியுறுத்தினார்."