விபின் ராவத் குறித்து அவதூறு கருத்து; கைது நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை
இரு பிரிவினரிடையே பகைமையை உண்டாக்குதல், உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மதத்தை அவமதித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முப்படை தலைமை தளபதி விபின் ராவத்தின் மரணம் குறித்து அவதூறு கருத்துகள் பரப்பியதாக குஜராத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அகமதாபாத் சைபர் பிரிவு, இந்த கைது மேற்கொண்டதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, பல அவதூறு கருத்துகள் தெரிவித்திருந்த போதிலும், அவதமிக்கும் வகையில் அவர் சமீபத்தில் தெரிவித்திருந்த கருத்து எங்களின் கவனத்திற்கு எடுத்து வரப்பட்டது. இதையடுத்து, கைது மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
குஜராத் அம்ரேலி மாவட்டம் பெராய் கிராமத்தை சேர்ந்த குற்றம்சாட்டப்பட்டவரின் பெயர் சிவபாய் ராம் என சைபர் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. புதன்கிழமை, குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் குறித்து அவர் எந்த விதமான கருத்துகளை தெரிவித்திருக்கிறார் என்பது தெரிவிக்கப்படவில்லை.
Advertisement
இதுகுறித்து காவல் துணை ஆணையர் ஜிதேந்திர யாதவ் கூறுகையில், "ராம் தனது முந்தைய பதிவுகளுக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் தனது முகநூல் கணக்கில் 'சிவபாய் அஹிர்' என பக்கத்தில் இந்து தெய்வங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் குறித்து இழிவான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
153-ஏ பிரிவின் கீழ் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்த குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் மதத்தை அவமதித்ததால் ஐபிசியின் 295-ஏ பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபின் ராவத் குறித்து சில இழிவான கருத்துகளை தெரிவித்ததால் குற்றம் சாட்டப்பட்டவர் எங்கள் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டார். அவரது டைம்லைனை சோதனை செய்ததில், அவர் இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களைப் பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பகிர்ந்துள்ளார் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
கடந்த காலங்களில் அவர் தனது முகநூல் பதிவுகளில் மக்கள் பிரதிநிதிகளை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி இழிவுப்படுத்தியுள்ளார். எஃப்ஐஆர் பதிவு செய்த பின்னர், சைபர் கிரைம் அலுவலர்கள் ராமை அவரது சொந்த இடமான அம்ரேலியில் இருந்து கைது செய்து இங்கு அழைத்து வந்தனர்.
இதையும் படிக்க | அடுத்த முப்படைத் தலைமைத் தளபதி யார்?
அவர் அரசியல் ஆசைகளை கொண்டிருந்ததும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை பகிர்வதன் மூலம் ஊடக வெளிச்சத்தில் இருக்க விரும்புவதும் விசாரணையின் போது தெரியவந்துள்ளது" என்றார்.