பாஜகவில் இணைந்த ஜிதின் பிரசாதா யார்?
முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரப் பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜிதின் பிரசாதா புதன்கிழமை பாஜகவில் இணைந்தார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், உத்தரப் பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜிதின் பிரசாதா புதன்கிழமை பாஜகவில் இணைந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் காங்கிரஸுக்கு இது மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவால் பிராமணர்களின் முகமாக ஜிதின் பிரசாதா போற்றப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
யார் இந்த ஜிதின் பிரசாதா?
ஜிதின் பிரசாதாவின் தந்தை ஜிதேந்திர பிரசாத். இவர் உத்தரப் பிரதேசத்தில் பிராமணர்களின் முகமாக பிரபலமாக அறியப்பட்டார். 1999-இல் சோனியா காந்தி தலைமையை எதிர்த்த அவர், கட்சித் தலைவர் பதவிக்கு அவருக்கு எதிராகப் போட்டியிட்டார். 2002-இல் ஜிதேந்திர பிரசாதா காலமானார்.
மத்திய அமைச்சர்:
ஜிதின் பிரசாதா தொடக்கத்தில் இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலராக இருந்தார். 2004-இல் முதன்முதலாக மக்களவைக்குத் தேர்வானார். 2008-இல் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் இவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
தொடர் தோல்விகள்:
இதையடுத்து, சொந்த குடும்பத் தொகுதியான தௌராரா மக்களவைத் தொகுதியில் 2014 மற்றும் 2019 என இரண்டு முறையும் ஜிதின் தோல்வியடைந்தார். 2017 உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலிலும் அவர் தோல்வியடைந்தார்.
2019-இல் வெளியேற திட்டம்?
ஜிதின் எப்போதும் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராகவே அறியப்பட்டு வந்தார். ஆனால், 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இவர் காங்கிரஸிலிருந்து விலக திட்டமிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தி வதேராவும் அவரைச் சமதானப்படுத்தியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இதைத் தொடர்ந்து, கட்சியில் சீர்த்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு 23 தலைவர்கள் கடந்தாண்டு கடிதம் எழுதினர். அதில் ஜிதின் பிரசாதாவும் ஒருவர்.
மேற்கு வங்க பேரவைத் தேர்தல் பொறுப்பாளர்:
இருந்தபோதிலும், மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் பொறுப்பாளராக ஜிதின் பிரசாதா நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் இடதுசாரியுடன் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில், இவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.