இந்தியாவின் கருத்தாக்கத்தை உடைக்கும் பிரதமர் மோடி: ராகுல் காந்தி விமரிசனம்
இந்தியர்களுக்கிடையே உள்ள நல்லுறவை பிரதமர் மோடி உடைப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியர்களிடையே உள்ள நல்லுறவை பிரதமர் மோடி உடைப்பதாகவும் இதன் காரணமாக இந்தியாவின் கருத்தாக்காக்கம் தகர்க்கப்படுவதாகவும் ராகுல் காந்தி விமரிசித்துள்ளார்.
கேரளம் மலப்புரத்தில் டயாலிசிஸ் மையத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், "இந்தியா என்பது புவியியல் எல்லைகளை கொண்ட நாடு மட்டும் அல்ல. இங்கு வாழும் மக்கள் ஒருவருக்கொருவர் நல்லுறவை பேணிக்காத்து வருகின்றனர்.
இந்திய மக்களிடையே உள்ள நல்லுறவை பிரதமர் மோடி உடைத்தால், அது நாட்டின் கருத்தாக்கத்தை தகர்ப்பது போன்றதாகும். அதனால்தான், நான் அதை எதிர்க்கிறேன். இந்தியா ஒரு பிரதேசம் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்தியா என்றால் மக்கள், அவர்களின் உறவுகள் என்று நாங்கள் சொல்கிறோம்.
Advertisement
இது இந்து மற்றும் இஸ்லாம், இந்து, இஸ்லாம் மற்றும் சீக்கியர்களுக்கிடையேயான உறவு. தமிழ், இந்தி, உருது, வங்காளி ஆகியவற்றுக்கு இடையேயான உறவு. பிரதமருடனான எனது பிரச்சனை என்னவென்றால், அவர் இந்த உறவுகளை உடைக்க பார்க்கிறார்.
ஒவ்வொரு முறையும், இந்தியர்களுக்கிடையேயான பாலத்தை உடைக்க அவர் வெறுப்பைப் பயன்படுத்துகிறார். அந்த பிளவை அன்பை கொண்டு மீண்டும் கட்டமைப்பதே எனது வேலை. அது என்னுடைய வேலை மட்டுமல்ல. நம்முடைய வேலை.
இதையும் படிக்க | பஞ்சாபில் தொடரும் குழப்பம்: இன்று கூடுகிறது அமைச்சரவை
இந்த நாட்டில் பல்வேறு மரபுகள், கருத்துக்கள், பல்வேறு மதங்கள், வெவ்வேறு கலாச்சாரங்கள் ஆகியவற்றை புரிந்து கொள்ளாமல் என்னால் அதை கட்டியெழுப்ப முடியாது. அவர் இந்தியர்களுக்கிடையேயான உறவை முறிக்க பார்க்கும் அதே சமயத்தில், இந்தியர்களுக்கிடையே பாலத்தை கட்டியெழுப்புவதை எனது கடமையாகவும் வேலையாகவும் கருதுகிறேன்" என்றார்.