இந்துத்துவாவுக்கான காப்புரிமையை பாஜக வைத்திருக்கவில்லை என்றும் காவி மற்றும் இந்துத்துவாவை இணைப்பது மத்தியில் ஆட்சி அமைக்க உதவும் என பால் தாக்கரேதான் பாஜகவுக்கு கற்று கொடுத்ததாக மகாராஷ்டிரம் முதல்வர் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறவுள்ள கோலாப்பூர் வடக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளும் கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயஸ்ரீ ஜாதவை ஆதரித்து இணையம் வழியாக பிரசாரம் மேற்கொண்ட உத்தவ் தாக்கரே, பாஜகவை கடுமையாக சாடினார்.
கடந்த 2019 தேர்தலில், பாஜக மற்றும் சிவசேனை கூட்டணி அமைத்திருந்தபோதிலும் சிவசேனை வேட்பாளர் தோல்வி அடைந்ததற்கு பாஜகவே காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் பேசிய அவர், "பாஜகவை போல் அல்லாமல் காவி மற்றும் இந்துத்துவாவில் சிவசேனை உறுதியாக உள்ளது. பாரதிய ஜன சங்கம், ஜன சங்கம் என பல பெயர்களை கொண்ட பாஜகவுக்கு வெவ்வேறு கொள்கைகள் உள்ளன. 2019 தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் பாஜக ரகசிய கூட்டணி வைத்திருந்ததா? 2014 தேர்தலுடன் ஒப்பிடும்போது 2019 தேர்தலில் (கோலாப்பூர் வடக்கில்) காங்கிரஸின் வாக்குகள் அதிகரித்தன. 2019 இல் பாஜகவின் வாக்குகள் எங்கே போனது?
இந்துத்துவாவுக்கு என பாஜக காப்புரிமை வைத்திருக்கவில்லை. ராமர் பிறக்காமல் இருந்திருந்தால், பாஜக எதை வைத்து அரசியல் செய்திருக்கும். பேசுவதற்கு எந்த விவகாரமும் இல்லாததால் மதம் குறித்து பேசி வெறுப்பை பரப்பிவருகிறது.
இதையும் படிக்க | மோடி- பைடன் இன்று பேச்சு...
பாஜக பால் தாக்கரேவை மதிப்பதாகக் கூறினால், நவி மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு மறைந்த சிவசேனை நிறுவனர் பெயர் வைப்பதை அந்தக் கட்சி ஏன் எதிர்க்கிறது? நான் கோயிலாகக் கருதும் பாலாசாகேப்பின் அறையில் அமித் ஷா அளித்த வாக்குறுதியிலிருந்து பாஜக ஏன் பின்வாங்கியது?" என்றார்.
2019 ஆண்டு வரை, பாஜகவுடன் சிவசேனை கூட்டணி வைத்திருந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்வர் பொறுப்பு இரண்டரை ஆண்டுகளுக்கு சிவசேனைக்கு வழங்கப்படும் என அமித் ஷா உறுதி அளித்ததாக உத்தவ் கூறியிருந்தார்.
முதல்வர் பதவி யாருக்கு என்ற விவகாரத்தில் பிரச்னை வெடித்ததையடுத்து பாஜகவுடனான கூட்டணியை சிவசேனை முறித்தி கொண்டது.