ஒரே மாதத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக இரண்டு தாக்குதல் சம்பவங்கள் நடந்ததைத் தொடர்ந்து பிகார் முதல்வர் நிதிஷ் குமாரின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாநில முதல்வருக்கும் பாதுகாப்பு வழங்க தேசிய பாதுகாப்பு படையால் சிறப்பு பயிற்சி பெற்ற எஸ்எஸ்ஜி எனப்படும் மாநில பாதுகாப்பு படையினர் பணியாற்றி வருகின்றனர். முதல்வரின் பயணம் முதல் அவர் தங்கும் இடம் வரை அனைத்து பகுதிகளிலும் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநிலப் பாதுகாப்பு படை உறுதி செய்கிறது.
இதையும் படிக்க | மருத்துவப் படிப்பு காலி இடங்களைத் திரும்பப் பெற ஓபிஎஸ் வலியுறுத்தல்
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி நாளந்தா மாவட்டத்தில் பிகார் முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இளைஞர் ஒருவர் வெடிகுண்டு வீசிய சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்த அசம்பாவித சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு முதல்வர் நிதிஷ் குமாரின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வரின் பாதுகாப்பை வலுப்படுத்த பாதுகாப்பு பணியில் மேலும் 50 காவலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 3 காவல் ஆய்வாளர்கள், 11 துணை காவல் ஆய்வாளர்கள், 20 உதவி துணை காவல் ஆய்வாளர்கள் மற்றும் 18 காவலர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் முதல்வர் நிகழ்ச்சிகளில் பல அடுக்கு பாதுகாப்பு வழிமுறைகளை செயல்படுத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் பாட்னா மாவட்டத்தின் பக்தியார்பூரில் நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் நிதிஷ் குமார் மீது இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்திய விடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.