அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதில் இந்தியா சிறப்பாக செயல்படுவதாக ஐ.நா. அகதிகள் நல துணை ஆணையா் கிலியன் ட்ரிக்ஸ் புகழாரம் சூட்டியுள்ளாா்.
இந்தியாவில் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவா், தில்லியிலுள்ள தேசிய காந்தியடிகள் அருங்காட்சியகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசியதாவது:
சொந்த நாடுகளில் வாழ முடியாமல் அண்டை நாடுகளில் தஞ்சமடையவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட அகதிகள், கௌரவத்துடன் நடத்தப்படவேண்டும்.
நான் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளதற்கான காரணங்களில் ஒன்று, இந்த நாடு அகதிகளுக்கு பல நூற்றாண்டு காலமாக அடைக்கலம் அளித்து வருவதாகும்.
அகதிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதில் இந்தியாவுக்கு நீண்ட கால வரலாறு உண்டு.
திபெத் மற்றும் இலங்கையிலிருந்து வந்த அகதிகளைப் பாதுகாப்பதற்காக இந்தியா மேற்கொண்டுவரும் முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை என்றாா் அவா்.