நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடா்பாக தில்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ‘யங் இந்தியா’ நிறுவனத்தின் அலுவலகத்துக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை தற்காலிகமாக சீல் வைத்தனா்.
நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்திய நிலையில், யங் இந்தியா நிறுவனத்தில் இருந்த அவணங்களைக் கைப்பற்ற நிறுவனத்தின் உரிய பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால், அந்த ஆதாரங்களை அங்கேயே பாதுகாக்கும் நோக்கில் அலுவலகத்துக்கு தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டது எனவும் அந்த வளாகத்தில் அமைந்துள்ள மற்ற நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படவில்லை எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘அமலாக்கத்துறை அனுமதியின்றி நிறுவனத்தை திறக்கமுடியாது’ என்ற நோட்டீஸையும் அதிகாரிகள் அலுவலக சுவற்றில் ஒட்டிச் சென்றுள்ளனா்.
நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், இந்த அதிரடி சோதனையை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனா்.
‘வழக்கில் கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கும் நோக்கில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) குற்றவியல் பிரிவின் கீழ் இந்த சோதனை நடத்தப்பட்டது’ என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
யங் இந்தியா அலுவலகம் சீலிடப்பட்டதையடுத்து, காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம், சோனியா காந்தி இல்லம் ஆகியவற்றை சுற்றி தில்லி போலீஸாா் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனா்.