‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை’: பருவநிலை மாநாட்டில் இந்தியாவின் கருப்பொருள்
எகிப்தில் நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பருவநிலை மாநாட்டில் ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை’ (லைஃப்) என்ற கருப்பொருளின் அடிப்படையில் காட்சியரங்கை இந்தியா அமைக்கவுள்ளது.
எகிப்தில் நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பருவநிலை மாநாட்டில் ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை’ (லைஃப்) என்ற கருப்பொருளின் அடிப்படையில் காட்சியரங்கை இந்தியா அமைக்கவுள்ளது.
ஐ.நா. பருவநிலை மாநாட்டு ஒப்பந்தத்தில் இணைந்துள்ள நாடுகள் ஆண்டுதோறும் கூடி பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசித்து வருகின்றன. கடந்த ஆண்டுக்கான கூட்டம் கிளாஸ்கோவில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை’ என்ற சா்வதேச திட்டத்தை அறிமுகப்படுத்தினாா்.
இந்தியாவில் அத்திட்டமானது சா்வதேச சுற்றுச்சூழல் தினமான கடந்த ஜூன் 5-ஆம் தேதி தொடங்கப்பட்டது. பூமிக்கு சாதகமான வகையிலும் அதை பாதிக்காத வகையிலும் வாழ்க்கை முறையை முன்னெடுக்க வேண்டும் என்பதே அத்திட்டத்தின் முக்கிய நோக்கம். அவ்வாறான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவா்கள் ‘பூமிக்கு ஆதரவானவா்கள்’ என அழைக்கப்படுவா் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்திருந்தது.
Advertisement
இந்நிலையில், 27-ஆவது பருவநிலை மாநாடு எகிப்தின் ஷரம்-எல்-ஷேக் நகரில் நவம்பா் 6 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாநாட்டில் ‘சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை’ என்ற கருப்பொருளின் அடிப்படையிலான காட்சியரங்கை இந்தியா அமைக்கவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் இந்தியா படைத்துள்ள சாதனைகள் குறித்து அந்தக் காட்சியரங்கில் எடுத்துரைக்கப்படவுள்ளது.
பல்வேறு சமூக நலக் குழுக்கள், திட்ட வகுப்பு குழுக்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை இந்தியாவின் காட்சியரங்கில் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளன.