மாநிலங்களவையில் நடைபெற்ற வழியனுப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினார்.
தற்போது குடியரசு துணைத் தலைவராக உள்ள வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. புதிய குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கா் தேர்வாகியுள்ளார். இவர், ஆகஸ்ட் 11ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில், மாநிலங்களவையில் வெங்கையா நாயுடுவுக்கு வழியனுப்பும் விழா இன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்று பாராட்டு தெரிவித்தனர்.
நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வெங்கையா நாயுடு பேசியதாவது:
மாநிலங்களவைக்கு அதிக பொறுப்புகள் உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை பார்த்துக் கொண்டிருக்கிறது. மாநிலங்களவையின் மரியாதையை உறுப்பினர்கள் காக்க வேண்டும். கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் என்னிடம் தெரிவித்தபோது, என் கண்களில் நீர் வந்தது. இந்தப் பொறுப்பை கட்சி எனக்கு அளித்ததால், கட்சியிலிருந்து ராஜிநாமா செய்தேன். கட்சியைவிட்டு செல்வதால் கண்ணீர் வந்தது.
அவையை சிறப்பாக வழிநடத்த என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு என எல்லா தரப்புக்கும் வாய்ப்பளிக்க முயற்சித்தேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் நேரம் கொடுக்கப்பட்டது.
நாம் எதிரிகள் அல்ல, போட்டியாளர்கள். போட்டியில் மற்றவர்களை முந்துவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால், மற்றவர்களை வீழ்த்தக்கூடாது. நாடாளுமன்றம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். உங்களின் அன்பிற்கும், பாசத்திற்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்