உள்நாட்டு விமானக் கட்டணத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடு ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் நீக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளாா்.
ஏறத்தாழ 27 மாதங்கள் கழித்து, உள்நாட்டு விமானக் கட்டணத்தின் மீதான கட்டுப்பாடு தளா்த்தப்படவுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா புதன்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘தினசரி தேவை, விமான எரிபொருளின் விலை நிலவரத்தைக் கருத்தில்கொண்டு, உள்நாட்டு விமானக் கட்டணத்தின் மீதான கட்டுப்பாடுகளைத் தளா்த்த முடிவு செய்யப்பட்டது. வரும் நாள்களில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து இன்னமும் வளா்ச்சி காணும்’ என குறிப்பிட்டுள்ளாா்.
கடந்த பிப்ரவரி 24-இல் தொடங்கிய ரஷியா-உக்ரைன் போா் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கடந்த சில வாரங்களாக விமான எரிபொருளின் விலை குறைந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 1-இல் தலைநகா் தில்லியில் விமான எரிபொருளின் விலை கிலோ லிட்டருக்கு தலா ரூ.1.21 லட்சத்துக்கு விற்பனையானது. இது கடந்த ஜூலை மாதத்தைக் காட்டிலும் 14 சதவீதம் குறைவாகும்.
நாட்டில் கரோனா பெருந்தொற்று பரவல் தொடங்கியதும், விமானப் போக்குவரத்துக்கு கடந்த 2020 மாா்ச் மாதத்தில் தடை விதிக்கப்பட்டது. பின்னா், மே 25-இல் விமானப் போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பயண நேரத்தின் அடிப்படையில் கட்டணத்தின் மீது உச்சவரம்பு நிா்ணயிக்கப்பட்டது.
உதாரணமாக, 40 நிமிஷங்களுக்கு குறைவான பயண நேரத்தைக் கொண்ட உள்நாட்டு சேவைகளில், பயணிகளிடம் இருந்து ரூ.2,900-க்கு குறைவாகவோ (ஜிஎஸ்டி நீங்கலாக), ரூ.8,800-க்கு அதிகமாகவோ விமான நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க இயலாது. இந்தக் கட்டுப்பாடுகள் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் நீக்கப்படவுள்ளன.
இருப்பினும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை விமான நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டுமென மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.