பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பலுசிஸ்தான் உள்பட சில மாவட்டங்களில் பெய்த கனமழையில் ஒரு குழந்தை உள்பட குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பலுசிஸ்தானில் இதுவரை 200 பேர் உயிரிழந்துள்ளனர். மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 18,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன மழையால் ஆழ்குழாய் கிணறுகள், சோலார் பேனல்கள் மற்றும் பிற தகவல் தொடர்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக மாகாண அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாவட்ட துணை ஆணையர் முனீர் அகமது கக்கர் கூறுகையில்,
கடந்த 24 மணி நேரத்தில் பலுசிஸ்தானின், குவெட்டாவின் புறநகரில் அமைந்துள்ள கில்லி காலி பகுதியில் இரண்டு வீட்டின் சுவர் இடிந்ததில் மூவர் உயிரிழந்தனர். சாமன் மாவட்டத்தில் கனமழைக்கு மற்றொருவர் உயிரிழந்தார். கிலா அப்துல்லா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இறந்தவர்களில் 4 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
இதற்கிடையில், அப்பர் கோஹிஸ்தானின் இச்சார் நுல்லா பகுதியில் காரகோரம் நெடுஞ்சாலையில் நிறுவப்பட்ட தற்காலிக எஃகு பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் இடையேயான போக்குவரத்து இந்த மாதம் இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.
குறிப்பாக பலுசிஸ்தானில் இந்தாண்டு பருவமழை காலத்தில் வழக்கத்திற்கு மாறாகக் கனமழை பெய்துள்ளது. மாகாணத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
இதையடுத்து, அடுத்த இரண்டு நாள்களுக்கு சிந்துவின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கன முதல் மிகக் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளது. பாகிஸ்தானின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் ஆகஸ்ட் 14 வரை பலத்த காற்று வீசக்கூடும்.
மேலும், பலுசிஸ்தானின் வடகிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களிலும் மழை தீவிரமடையக்கூடும், மேலும் தாது, ஜாம்ஷோரோ மற்றும் கம்பர் ஷாஹ்தாட்கோட் மாவட்டங்கள் மற்றும் கீழ்நிலையில் திடீர் வெள்ளம் ஏற்படும் என்று வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.