ஆரோக்கிய சூழல்: அதிகரிக்கும் இந்திய பொம்மை உற்பத்தி
சந்தையில் நிலவி வரும் ஆரோக்கிய சூழல் காரணமாக, இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அதிகரித்துள்ளனா்.
சந்தையில் நிலவி வரும் ஆரோக்கிய சூழல் காரணமாக, இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அதிகரித்துள்ளனா்.
இது குறித்து சந்தை வட்டாரங்கள் கூறியதாவது:
இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள் மீதான சுங்க வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது. அத்துடன், பொம்மை இறக்குமதி நிறுவனங்கள் தரம், பாதுகாப்பு, நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கான பிஐஎஸ் சான்றிதழை பெறுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இதுபோன்ற கட்டுப்பாடுகளால், வெளிநாடுகளிலிருந்து பொம்மைகள் இறக்குமதி செய்வது கடினமாகியுள்ளது.
இதன் விளைவாக, கடந்த 2018-19-இல் 30.4 கோடி டாலராக இருந்த இந்தியாவுக்கான பொம்மைகள் இறக்குமதி மதிப்பு 2021-22-இல் 3.6 கோடி டாலராக குறைந்துள்ளது.
இறக்குமதி குறைந்தது மட்டுமன்றி, இந்தியாவிலிருந்து பொம்மைகள் ஏற்றுமதியாவதும் அதிகரித்துள்ளது.
கடந்த 2018-19-இல் 10.9 கோடி டாலரிலிருந்து 2021-22-ஆம் ஆண்டில் 17.7 கோடி டாலராக அதிகரித்துள்ளது.
இந்த ஆரோக்கியமான சூழலில், இந்திய பொம்மை நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அதிகரித்து வருகின்றனா்.
இந்திய காப்பியங்களில் வரும் சோட்டா பீம் போன்ற உள்நாட்டு கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட பொம்மைகளுக்கான தேவையும் சந்தையில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவும், உள்நாட்டு பொம்மை உற்பத்தி அதிகரித்து வருகிறது என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.