திமுக மட்டும்தான் புத்திசாலித்தனமான கட்சி என்று நினைத்துக்கொள்ள வேண்டாம் என 'இலவசங்கள்' குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா காட்டமாகக் கூறியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்குரைஞா் அஷ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளாா்.
இந்த வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் ஜே.கே. மகேஷ்வரி, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது.
இலவசங்கள் குறித்து உச்சநீதிமன்றம் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறது. இன்றைய விசாரணையில், இலவசங்கள் மிக முக்கியமான பிரச்னை. அதுகுறித்த விவாதம் தேவை என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இந்த வழக்கில் ரிட் மனு மூலமாக திமுக தன்னை எதிர்மனுதாரராக சேர்த்துக்கொண்டது.
இலவசங்களால் மக்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளது என்று திமுக தரப்பிலும் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான வில்சன் பேச முயன்றபோது, 'தலைமை நீதிபதியாக நான் எதுவும் சொல்ல முடியாது. ஆனால், உங்கள் கட்சி நடந்து கொள்ளும் விதம், உங்கள் அமைச்சர் பேசும் விதம் ஆகியவற்றை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று நினைக்க வேண்டாம். நீங்கள் மட்டும் தான் புத்திசாலித்தனமான கட்சி என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்' என்று கூறினார்.
இதைக் கேட்ட மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், 'தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கருத்துகள் கண்டனத்துக்குரியவை' என்று தெரிவித்தார்.