இலவசங்கள் முக்கியமான பிரச்னை; அதுகுறித்த விவாதம் தேவை: உச்சநீதிமன்றம் கருத்து
இலவசங்கள் மிக முக்கியமான பிரச்னை என்றும் அதுகுறித்த விவாதம் தேவை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இலவசங்கள் மிக முக்கியமான பிரச்னை என்றும் அதுகுறித்த விவாதம் தேவை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்குரைஞா் அஷ்வினி உபாத்யாய் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளாா்.
இந்த வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் ஜே.கே. மகேஷ்வரி, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது.
Advertisement
Advertisement
இலவசங்கள் குறித்து உச்சநீதிமன்றம் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறது. அரசியல் கட்சிகள் அளிக்கும் இலவச வாக்குறுதிகளைத் தடுக்க இயலாது என்றும் அதேநேரம் இலவச பொருள்களையும், வளா்ச்சித் திட்டங்களையும் குழப்பிக் கொள்ளக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தனது முந்தைய விசாரணையில் கூறியது.
இந்நிலையில் இன்றைய வழக்கின் விசாரணையில், 'இலவசங்கள் மிக முக்கியமான பிரச்னை. அதுகுறித்த விவாதம் தேவை.
மாநிலங்கள் இலவசங்களை வழங்க முடியாது என்று மத்திய அரசு சட்டம் இயற்றினால் அது நீதித்துறை ஆய்வுக்கு உரியது அல்ல என்று சொல்ல முடியுமா? நாட்டின் நலனுக்காகவே இதுகுறித்து விசாரிக்கிறோம்.
நாட்டில் இலவசங்களுக்கும் மக்கள்நலத்திட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிந்து எது இலவசம், எது மக்கள் நலத்திட்டம் என்று முடிவு செய்ய வேண்டும்.
ஏனெனில், சில மாநிலங்களின் மக்கள்நலத் திட்டங்களால் மக்களுக்கு பலன் கிடைக்கிறது, குறிப்பிட்ட சமூகத்தினர் பயனடைகிறார்கள்' என்று கூறினார்.
இந்த வழக்கில் திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் எதிர்மனு தாரர்களாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.