தில்லியில் பாஜகவின் ஆபரேஷன் தாமரை தோல்வியடைந்து விட்டதாக ஆம் ஆத்மியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறது. பாஜகவின் இந்த அரசியல் சூழ்ச்சிகள் அவர்களை ஒன்றும் செய்யாது. தில்லியில் ஆம் ஆத்மியின் சட்டமன்ற உறுப்பினர்களை பாஜகவின் பக்கம் இழுக்க ஒருவருக்கு ரூ.20 கோடி தருவதாக பாஜக சார்பில் பேரம் பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஆம் ஆத்மியின் செய்தித் தொடர்பாளர் சௌரப் பரத்வாஜ் கூறியதாவது: “ மற்ற கட்சியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக எவ்வாறு தங்கள் பக்கம் இழுக்கிறது என்பதை நாட்டு மக்கள் காண்கிறார்கள். மகாராஷ்டிரம் மற்றும் கோவாவில் சட்டமன்ற உறுப்பினர்களை ஆசை காட்டி தனது பக்கம் இழுத்ததுபோல் தில்லியிலும் பாஜக முயன்று வருகிறது. ஆனால், பாஜகவின் ஆபரேஷன் தாமரை தில்லியில் தோற்றுவிட்டது எனக் கூறுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மற்ற மாநிலங்களின் அரசை கவிழ்த்ததுபோல் தில்லியில் செய்ய முடியாது. பாஜகவின் செயல்பாடுகளை வருங்காலத்திலும் நாங்கள் கவனிக்க உள்ளோம்.” என்றார்.