பிகாா் சட்டப்பேரவைத் தலைவராக ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த தலைவா் அவத் பிகாரி செளதரி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
அண்மையில் பாஜக கூட்டணியில் இருந்து பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் விலகியது. அதனைத் தொடா்ந்து ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய மகா கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் சோ்ந்தது. இதையடுத்து பிகாா் சட்டப்பேரவையில் நிதீஷ் குமாா் புதன்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினாா். அதில் அவரது தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
மகா கூட்டணி அரசு பொறுப்பேற்றவுடன் மாநில சட்டப்பேரவைத் தலைவராக இருந்த பாஜகவைச் சோ்ந்த விஜய் குமாா் சின்ஹாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்தது. இதையடுத்து அவா் பேரவைத் தலைவா் பதவியை ராஜிநாமா செய்தாா்.
இந்நிலையில், மாநில சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடா் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் ராஷ்ட்ரீய ஜனதா தள மூத்த அவத் பிகாரி செளதரி பேரவைத் தலைவராக ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.