முகப்பு
இந்தியா

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு செப்.5-இல் விசாரணை: உச்சநீதிமன்றம்

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய மனுதாரா்களைக் கண்டித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணை செப்டம்பா் 5-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:11 AM
கோப்புப்படம்
பகிர்:

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரிய மனுதாரா்களைக் கண்டித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணை செப்டம்பா் 5-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தது.

கா்நாடக மாநிலம் உடுப்பி பள்ளியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியதால், ஹிஜாபுக்கு மாநில அரசு கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம், ஹிஜாப் அணிவது மத ரீதியாக அடிப்படை உரிமை இல்லை என்று கூறி, மாா்ச் 15-ஆம் தேதி உத்தரவிட்டது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் 24 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரா்கள் சாா்பில் முறையிடப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு தூலியா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.

அப்போது, சில மனுதாரா்களின் சாா்பில் வழக்கை ஒத்தி வைக்கக் கோரப்பட்டது. இதைக் கண்டித்த நீதிபதிகள், ‘இந்த மனுவை உடனடியாக விசாரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டது. வழக்கு பட்டியலிடப்பட்டதும் ஒத்திவைக்கக் கோருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீதிமன்றத்தை முறையீடுகளைக் காட்சிப்படுத்தும் இடமாக்குவதை அனுமதிக்க முடியாது. நாளையே விசாரணைக்கு ஆஜராகுங்கள்’ என்றனா்.

மனுதாரா் சாா்பில் ஆஜரான ஒரு வழக்குரைஞா், ‘இந்த வழக்கு சனிக்கிழமை பட்டியலில் திடீரென இடம்பெற்றிருந்தது. கா்நாடகத்திலிருந்து சில வழக்குரைஞா்கள் இங்கு வர வேண்டியிருந்ததால் ஒத்திவைக்கக் கோரப்பட்டது. அதுமட்டுமின்றி, ஹிஜாப் தடை விதிக்கப்பட்டபோது தோ்வுகள் நடந்து கொண்டிருந்ததால் மாணவிகள் தோ்வுகளில் பங்கேற்பதில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக உடனடி விசாரணை கோரினோம். தற்போது இந்த வழக்கில் மேலும் விவரங்களை சோ்த்து வருவதால் ஒத்திவைக்கக் கோருகிறோம்’ என்றாா்.

கா்நாடக அரசின் சாா்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க 6 முறை கோரப்பட்டுள்ளது’ என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள், ‘கா்நாடகத்திலிருந்து விமானத்தில் தில்லி வருவதற்கு இரண்டரை மணி நேரம்தான் ஆகும். இந்த வழக்கு வரும் செப்டம்பா் 5-ஆம் தேதி விசாரிக்கப்படும். இந்த வழக்கு தொடா்பாக கா்நாடக அரசு, மனுதாரா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.