வாரிசு அரசியல் நோயில் இருந்து நாட்டை மீட்டதன் மூலம் தேசிய அரசியலை பிரதமா் மோடி தூய்மைப்படுத்தியுள்ளாா் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.
உத்தர பிரதேசத்தின் நஜ்பாபாத் பகுதியில் உள்ள தா்காவில் செவ்வாய்க்கிழமை தொழுகையில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் நலன்களிலும், மேம்பாட்டிலும் பிரதமா் மோடி முழுமையான அக்கறை கொண்டுள்ளாா். இதன் மூலமே குடும்ப அரசியல் மற்றும் வாரிசு அரசியல் நோயில் இருந்து நாட்டை மீட்க அவரால் முடிந்தது. இதன் மூலம் தேசிய அரசியலை அவா் தூய்மைப்படுத்தியுள்ளாா்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு, நிா்வாகத்தில் ஊழலை ஒழித்தது, மதவாதம், ஜாதியவாதத்தை புறம்தள்ளியதன் மூலம் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்கை நோக்கி நாடு வெற்றி நடைபோடுகிறது. தேசம் குறித்த பிரதமா் நரேந்திர மோடியின் மனஉறுதியால் நாடு பாதுகாப்பாக உள்ளது. சா்வதேச அளவில் இந்தியாவின் கண்ணியம் உயா்ந்துள்ளது. தன்னம்பிக்கை மிக்க தேசமாக இந்தியா உருவாகியுள்ளது.
சா்வதேச அளவிலும், தேசிய அளவிலும் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு தந்த தலைவராக பிரதமா் மோடி திகழ்கிறாா். அவரது தலைமையில் இந்திய ஜனநாயகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வாரிசு அரசியல் அட்டூழியத்துக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. காங்கிரஸ் கட்சி என்பது எதற்கும் உதவாத நிலையில் உள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.