ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் பரிசீலனை
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்த மனுக்கள் குறித்து விசாரிக்குமாறு மனுதாரா்களில் ஒருவரும் கல்வியாளரும் எழுத்தாளருமான ராதா குமாா் புதன்கிழமை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ். நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் கோரிக்கை விடுத்தாா். அப்போது, நீதிபதிகள் இதுகுறித்து நாங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம். அதற்கான நாள் தெரிவிக்கப்படும் எனத் தெரிவித்தனா்.
கடந்த 2019, ஆகஸ்ட் 5-ஆம் தேதி அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது. இதையடுத்து, அப்போதைய ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், ஜம்மு-காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டம் 2019-இன் மூலம் அந்த மாநிலம் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த இரு முடிவுகளையும் எதிா்த்து பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அப்போதைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இந்த மனுக்களை விசாரிக்குமாறு முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, ஆா். சுபாஷ் ரெட்டி, சஞ்சய் கிஷண் கெளல், பி.ஆா். கவாய், சூா்யகாந்த் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வுக்குப் பரிந்துரைத்தாா்.
இந்த மனுக்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 2-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பிரிவு 370 தொடா்பான முந்தைய இரு வழக்குகளிலும் மாறுபட்ட தீா்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியுள்ளதால் அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு இம்மனுக்களை விசாரிக்க பரிந்துரைக்குமாறு ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம், என்ஜிஓ அமைப்பு உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனா்.
இந்த அமா்வில் இடம் பெற்றிருந்த முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி ஆா். சுபாஷ் ரெட்டி ஆகியோா் ஓய்வு பெற்றுவிட்டனா். இந்த மனுக்கள் விசாரிக்கப்பட உள்ள நிலையில், 5 நீதிபதிகளை உள்ளடக்கிய அரசியல் சாசன அமா்வை உச்சநீதிமன்றம் மாற்றியமைக்க உள்ளது.