புது தில்லி: நாட்டில் 400 புதிய ரயில்கள் இயக்கப்படும், 100 புதிய சரக்கு முனையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 - 23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மத்திய நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருக்கும் முக்கிய அம்சங்கள்..
வரும் 2023ஆம் ஆண்டுக்குள் 2000 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே கட்டமைப்பு உருவாக்கப்படும்.
நாடு முழுவதும் 25,000 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும்.
உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
பல்வகை போக்குவரத்துகளை இணைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
வந்தே பாரத் வரிசையில் மேலும் 400 புதிய ரயில்கள் இயக்கப்படும்.
100 சரக்கு முனையங்கள் ஏற்படுத்தப்படும்.
சரக்குப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் சாலை, ரயில் கப்பல் போக்குவரத்துகள் இணைக்கப்படும்.
மெட்ரோ ரயில் திட்டங்கள் புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.