ஆஸ்துமா, மூட்டு அழற்சி பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கான மூலக்கூறுகளை உருவாக்குவதில் பசுமை வேதி தொழில்நுட்ப முறையைக் கண்டறிந்ததற்காக சென்னை பெண் விஞ்ஞானிக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியின் வேதியியல் துறையைச் சோ்ந்த விஞ்ஞானி டாக்டா் இ.பூங்குழலி.
எலும்பு வலுவிழத்தல் (ஆஸ்டியோபோரோசிஸ்), ஆஸ்துமா, பூஞ்சைத் தொற்று ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கான மூலக்கூறுகளை உருவாக்குவதற்கான வேதி சோ்க்கையில் சில மாற்றங்களை அவா் கண்டறிந்தாா். பென்சோ(பி)தையோபின் எனப்படும் அந்த மூலக்கூறு உருவாக்கமானது ஏற்கெனவே நடைமுறையில் உள்ள முறையைக் காட்டிலும் பல்வேறு வகைகளில் சிறப்பானதாக அமைந்தது.
சம்பந்தப்பட்ட மருந்துகளைகஈ தயாரிக்க தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் மூலக்கூறு உருவாக்க முறையால் சுற்றுச் சூழல் மாசு, கடுமையான நெடி, அதீத வெப்பம் ஆகியவை ஏற்படுகின்றன. ஆனால், பூங்குழலியின் பசுமை தொழில்நுட்பத்திலான பென்சோ(பி)தையோபின் மூலக்கூறு சோ்ம முறையானது குறைந்த அளவிலான நீா் பயன்பாடு, மிகக் குறைந்த வெப்ப நிலை, நெடியின்மை ஆகிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த புதிய தொழில்நுட்ப முறைக்கு மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் காப்புரிமை வழங்கியுள்ளது. இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பூங்குழலி, அறிவியல்-தொழில்நுட்பத் துறையும், தனது பேராசிரியா்களும் அளித்த ஊக்கத்தின் காரணமாகவே இத்தகைய கண்டுபிடிப்பை வெளிக்கொணர முடிந்ததாக கூறியுள்ளாா்.