பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை காங்கிரஸ்: பிரதமர் மோடி
காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் மோடி விமர்சனம்
காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கிவைத்த பிரதமர் மோடி, நிகழ்ச்சியில் பேசுகையில், "காங்கிரஸ் கட்சி, அசாமின் பல தலைமுறையினரை மாயக் கனவுகள் மூலம் ஏமாற்றி வந்தது. நீங்கள் காங்கிரஸை நாட்டிலிருந்து அசாமிலிருந்து அகற்றிவிட்டு, பாஜக-என்டிஏ கூட்டணிக்கு வாய்ப்பளித்தீர்கள்.
காங்கிரஸ், தனது சுயநல அரசியலுக்காக பல்வேறு சமூகங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தி வந்தநிலையில், பாஜகதான் நீடித்த அமைதியை ஏற்படுத்த முயற்சித்தது.
காங்கிரஸ் என்பது பொய் வாக்குறுதிகளை விற்கும் ஒரு கடை. ஒவ்வொரு பொய் வாக்குறுதியுடனும் 4 பெரும் பொய்களையும் போனஸாக காங்கிரஸ் வழங்குகிறது.
அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு எந்தக் காலத்திலும் சிறிதும் இல்லை.
காங்கிரஸார் மற்றொரு கொடிய பாவத்தையும் செய்தனர். அதுவே நாட்டுக்கும் அசாமுக்கும் ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியது.
வாழ்வாதாரம், பெண்கள், நிலம் ஆகிய 3 முக்கிய கூறுகளின் பாதுகாப்பையுமே காங்கிரஸ் கேள்விக்குறிக்கு உள்ளாக்கியது. அவர்கள் எப்போதும் ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவளித்து வந்தனர்.
இந்தப் பகுதியில் பழங்குடியினருக்கான நிலம் தொடர்பான அடிப்படை சட்ட ஆவணங்களைக்கூட காங்கிரஸார் வழங்க மறுத்தனர். ஆனால், அந்த நிலங்களை ஊடுருவல்காரர்களுக்கு அளித்தனர். இதனால், போடோலாந்தின் மக்கள்தொகையியல் சமநிலை சீர்குலையத் தொடங்கியது; சமூகத்தை ஒரு பெரும் நெருக்கடி ஆக்கிரமிக்கத் தொடங்கியது.
ஆனால், தற்போது ஹிமந்த பிஸ்வா சர்மாவின் ஆட்சியில் ஊடுருவல்காரர்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுக்கும் மாபெரும் இயக்கம் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.