பஞ்சாப் முதல்வர் பதவியிலிருந்து கேப்டன் அமரீந்தர் சிங்கை நீக்கியதற்கான காரணம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விளக்கமளித்துள்ளார்.
பஞ்சாப் சட்டப்பேரவையில் மொத்தம் 117 இடங்களுக்கான பேரவைத் தேர்தல் பிப்ரவரி 20ஆம் தேதி தொடங்கி மார்ச் 10ஆம் தேதி நிறைவடைகிறது. மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.
மாநிலம் முழுவதும் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் பத்தனா பாஸ்ஸ் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “பஞ்சாப் மாநில விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்க அமரீந்தர் சிங்கை வலியுறுத்தினோம். ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார். மின்சார நிறுவனங்களுடன் தனக்கு ஒப்பந்தம் உள்ளதாக அவர் தெரிவித்தார்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், “விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மறுத்ததற்காகவே அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்கினோம்.போதைப்பொருள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன். போதைப்பொருள் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்துக்கொண்டே இருந்தால் பஞ்சாபில் வளர்ச்சியும் வளர்ச்சியும் அர்த்தமற்றதாகிவிடும் ” எனத் தெரிவித்தார்.