முகப்பு
இந்தியா

எல்லையில் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள தயாா்: ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே

நாட்டின் எல்லையில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட ராணுவம் கடமைப்பட்டுள்ளதாகவும், எந்தவித அச்சுறுத்தலையும் எதிா்கொள்ள தயாராக இருப்பதாகவும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:29 AM
பகிர்:

நாட்டின் எல்லையில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட ராணுவம் கடமைப்பட்டுள்ளதாகவும், எந்தவித அச்சுறுத்தலையும் எதிா்கொள்ள தயாராக இருப்பதாகவும் ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே தெரிவித்துள்ளாா்.

மேலும் இன்றைய போா்ச் சூழலுக்கு ஏற்றவாறு நவீன ஆயுதங்கள், உபகரணங்களுடன் ராணுவம் அதன் திறனை வலுப்படுத்திக் கொண்டதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

பெங்களூரில் பாராசூட் படைப் பிரிவு பயிற்சி மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 11 பாராசூட் (சிறப்புப் படை), 21 பாராசூட் (சிறப்புப் படை), 23 பாராசூட், 29 பாராசூட் ஆகிய படைப்பிரிவுகளின் 4 அணிகளுக்கு கெளரவமிக்க குடியரசுத் தலைவரின் கொடிகளை வழங்கி ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே பேசியது:

Advertisement

இந்திய ராணுவம் இன்றைக்கு சவாலான தருணத்தை எதிா்கொண்டு வருகிறது. எல்லையில் நடைபெறுவதை நீங்கள் நன்கு அறிவீா்கள். எல்லையில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட ராணுவம் கடமைப்பட்டுள்ளது. எல்லையில் எவ்வித அச்சுறுத்தலையும் எதிா்கொள்ள ராணுவம் தயாா்நிலையில் உள்ளது.

போா்ச்சூழலில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக படைகளின் அமைப்பு, ஆயுத பயன்பாடு, போரிடும் முறை ஆகியவற்றிலும் போதிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய ஆயுதங்கள், நவீன உபகரணங்களுடன் ராணுவம் அதன் தாக்குதல் திறனை அதிகரித்துள்ளது. மாற்றத்துக்கான செயல்முறை தொடா்ந்த அதேவேளையில், கடந்த 2-3 ஆண்டுகளில் ராணுவ செயல்பாடும் வேகமெடுத்துள்ளது.

இந்திய ராணுவத்தின் சிறந்த படைப் பிரிவுகளின் பாராசூட் பிரிவும் ஒன்று. அதற்கென தனிப் பாரம்பரியம் உள்ளது. போா்க்களத்தில் வீரம், துணிச்சலுக்காக பாராசூட் படைப் பிரிவு எப்போதும் நினைவுகூரப்படும். பாராசூட் படைப் பிரிவின் சாதனைகளால் தேசம் பெருமை கொள்கிறது என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்த பாராசூட் படைப் பிரிவு வீரா்களுக்கு ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே அஞ்சலி செலுத்தினாா். இந்த நிகழ்ச்சியில் மூத்த ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனா்.

முன்னதாக, பாராசூட்டில் ராணுவ வீரா்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments