இது பாஜக மற்றும் ஷிண்டே கூட்டணியின் தற்காலிக அரசு என்றும் ஷிண்டே, சிவசேனையைச் சேர்ந்தவர் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்றும் சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே கூட்டணி அரசு அமைந்துள்ளது. மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, 145 வாக்குகள் தேவைப்படும் நிலையில், 164 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து சட்டப்பேரவையில் பேசிய துணை முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், உண்மையான சிவசேனை கூட்டணி அரசு இதுதான் என்று பேசியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத், தற்போதுள்ள கூட்டணி உண்மையான சிவசேனை என்று சொல்லிக்கொள்ள முடியாது. ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனையில் இருந்து உத்தவ் தாக்கரே நீக்கிவிட்டார். அதன்பிறகு அவர் எப்படி சிவசேனை என்று சொல்லிக்கொள்ள முடியும். சிவசேனை என்றால் தாக்கரே தான். இதுகுறித்து நாங்கள் கண்டிப்பாக நீதிமன்றம் செல்வோம்.
மேலும், 'பாஜக & ஷிண்டே கூட்டணி தற்காலிக ஏற்பாடுதான். அவர்களால் மக்களிடம் செல்ல முடியாது. மும்பை தாக்குதல் பயங்கரவாதியான கசாப்புக்குக்கூட அவ்வளவு பாதுகாப்பு இல்லை, ஆனால் அவர்கள் மும்பை சென்றபோது அதைவிட அதிக பாதுகாப்பு இருந்தது. நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பிய சஞ்சய் ரௌத், 'நாங்கள் பலமாக இருக்கிறோம். எங்கள் கட்சி ஒருபோதும் பலவீனமடையாது' என்றார்.
இதையும் படிக்க | நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றி