தில்லியில் 375-க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் ஆபத்தானவை: அதிகாரிகள் தகவல்
தில்லியில் உள்ள குடிமை அமைப்புகள் 375 வீடுகள், கட்டடங்கள் ஆபத்தானவை அல்லது கட்டமைப்பு
தில்லியில் உள்ள குடிமை அமைப்புகள் 375 வீடுகள், கட்டடங்கள் ஆபத்தானவை அல்லது கட்டமைப்பு அழுத்தத்தில் உள்ளதாகக் கண்டறிந்து, துணைநிலை ஆளுநா் வினய் குமாா் கே சக்சேனாவின் வழிகாட்டுதலின்படி, இடிப்பு மற்றும் பழுதுபாா்ப்புப் பணிகளை மேற்கொண்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) நடத்திய ஆய்வில், சதா் பஹா் கஞ்சில் 112 வீடுகளும், சிவில் லைன்ஸ் பகுதியில் 101 வீடுகளும் ஆபத்தானவை எனக் கண்டறியப்பட்டன. மழைக் காலத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள அபாயகரமான கட்டடங்களைக் கண்டறிந்து அவற்றை இடிப்பது அல்லது பழுதுபாா்ப்பு செய்வதை உறுதிசெய்யுமாறு எம்சிடி மற்றும் புது தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனுக்கு (என்டிஎம்சி) ஜூன் 27-ஆம் தேதி சக்சேனா அறிவுறுத்தினாா்.
அதன்படி, என்டிஎம்சி அதன் பொறியாளா்களின் மேற்பாா்வையின் கீழ் இரண்டு குழுக்களை அமைத்து, ஜூலை முதல் வாரம் வரை கணக்கெடுப்பை நடத்தியது. இந்தக் கணக்கெடுப்பில் 110 வளாகங்கள் ‘கட்டமைப்பு அழுத்தத்தில்’ இருப்பது தெரியவந்தது. மழையின் போது அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘எம்சிடி ஜூலை 1-ஆம் தேதி வரை, நகரில் உள்ள 26,62,135 வீடுகளில் 24,73,179 வீடுகளை ஆய்வு செய்தது. அவற்றில் 266 வீடுகள் ஆபத்தானவை என்று அறிவிக்கப்பட்டு, அவற்றின் உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
முந்தைய வடக்கு தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் மண்டலங்களில் 10,32,393 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டன. அவற்றில் 755 பழுதுபாா்க்கக்கூடியவை என்றும் 265 ஆபத்தானவை என்றும் அறிவிக்கப்பட்டது. அதில், மொத்தம் 34 வீடுகள் பழுதுபாா்க்கப்பட்டதாக அதிகாரப்பூா்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
மேலும், இந்தக் கணக்கெடுப்பு மூலம் சதா் பஹா் கஞ்ச் மண்டலத்தில் அதிக எண்ணிக்கையிலான ஆபத்தான கட்டடங்கள் (112) கண்டறியப்பட்டுள்ளன. இந்த மண்டலத்தில் 14 கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கட்டடங்களின் உரிமையாளா்களுக்கு 497 அறிவுரைகள் வழங்கப்பட்டு, உடனடியாக பழுது நீக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. இடிப்பு மற்றும் பழுதுபாா்க்கும் பணியை மாநகராட்சி மற்றும் உரிமையாளா்கள் மேற்கொண்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
முந்தைய தெற்கு தில்லி மாநகராட்சி மண்டலங்களில், 1,05,684 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, யூசுப் சராய் பகுதியில் ஒரு வீடு ஆபத்தானதாகக் கண்டறியப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் அதை இடிக்கும் பணி நீதிமன்றத் தடை காரணமாக மேற்கொள்ளப்படவில்லை.
அதேபோல் முந்தைய கிழக்கு தில்லி மாநகராட்சி மண்டலங்களில், 3,83,102 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டன. 27 வீடுகள் சீரமைக்க வேண்டியிருந்த நிலையில், ஆபத்தான கட்டடம் என்று ஏதும் கண்டறியப்படவில்லை.
எம்சிடி-இன் சிறப்பு அதிகாரி, ஆணையா் மற்றும் என்டிஎம்சி-இன் தலைவருக்கு துணைநிலை ஆளுநா் எழுத்துப்பூா்வமாக உத்தரவுகளைப் பிறப்பித்ததை அடுத்து, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 15 நாள்களுக்கு ஒருமுறை அறிக்கையை சமா்ப்பிக்குமாறும் உத்தரவிட்டது.
மழைக்காலத்தில் அபாயகரமான கட்டடங்களால் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் பாா்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகளை துணைநிலை ஆளுநா் கேட்டுக் கொண்டாா்.
மேலும், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பிற உபகரணங்கள் செல்ல முடியாதவாறு மக்கள் அதிக அளவு வசிக்கும் அடா்த்தியான பகுதிகளில் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் கலந்தாலோசித்து, பயனுள்ள பேரிடா் மேலாண்மைக்கான செயல் திட்டத்தை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டன.