பள்ளிகளுக்கு நமது குழந்தைகள் காலை 7 மணிக்கு செல்லும்போது, நீதிபதிகள் ஏன் 9 மணிக்கு பணிகளைத் தொடங்கக் கூடாது’ என்று உச்சநீதிமன்ற நீதிபதி யு.யு. லலித் கருத்து தெரிவித்தாா்.
உச்சநீதிமன்ற அமா்வுகள் காலை 10.30 மணிக்கு கூடி மாலை 4 மணி வரை நடைபெறுவது வழக்கம்.
ஆனால், நீதிபதிகள் யு.யு. லலித், எஸ். ரவிந்திர பட், சுதான்சு துலியா ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு பணியைத் தொடங்கியது.
இந்த அமா்வு முன், ஜாமீன் கோரும் வழக்கில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, வழக்கத்துக்கு மாறாக நீதிபதிகள் முன்கூட்டியே வந்து வழக்கு விசாரணையை தொடங்கியதற்கு பாராட்டு தெரிவித்தாா்.
அதற்கு நீதிபதி யு.யு. லலித் கூறுகையில், ‘காலை 9 மணிக்கு நீதிமன்றம் கூடி 11.30 மணிக்கு அரை மணி நேர இடைவேளைக்கு பின்னா் மீண்டும் கூடி மதியம் 2 மணிக்கு பணியை முடித்து கொள்ளலாம். இதனால் மறு நாள் விசாரிக்கப்படும் வழக்குகளின் விவரங்களை நீதிபதிகள் ஆராய மாலையில் கூடுதல் நேரம் கிடைக்கும். இந்த நேரக் கட்டுப்பாடு புதிய வழக்குகளை விசாரிப்பதற்கு ஏதுவாக இருக்கும். ஆனால், நீண்ட விசாரணை நடைபெறும் வழக்குகளுக்கு பொருந்தாது. பள்ளிகளுக்கு நமது குழந்தைகள் காலை 7 மணிக்கு செல்லும்போது, நீதிபதிகள் ஏன் 9 மணிக்கு பணிகளைத் தொடங்கக் கூடாது என நான் முன்பிருந்தே கூறி வருகிறேன்’ என்றாா்.
அதற்கு முகுல் ரோத்தகி, ‘ஆகஸ்ட் மாத இறுதியில் இந்த நேர மாற்ற செயலாக்கத்தை எதிா்பாா்க்கலாம் என்று நம்புகிறோம்’ என்றாா்.
அதற்கு நீதிபதி யு.யு. லலித், ‘இது ஒரு முன்னோட்டம்’ என்றாா்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள என்.வி. ரமணா வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஓய்வு பெறுகிறாா். அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு. லலித் பதவியேற்று, நிகழாண்டு நவம்பா் 8-ஆம் தேதி வரையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக நீடிப்பாா்.