கரோனா பொதுமுடக்க காலத்தில் நடந்த குழந்தை கடத்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் முன்னணியில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நடைபெறும் மழைக்காலக் கூட்டத்தொடரில் குழந்தை கடத்தல் தொடர்பாக எழுந்த கேள்விக்கு மத்திய அரசு மாநிலங்களவையில் பதிலளித்துள்ளது.
இதையும் படிக்க | ஓராண்டில் 796 உபா வழக்குகள் பதிவு: மத்திய அரசு தகவல்
அதன்படி நடப்பாண்டின் ஜூன் மாதம் வரையிலான காலம் வரை நாடு முழுவதும் 78 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 64 குழந்தைகள் உத்தரப்பிரதேசத்தில் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பொதுமுடக்கக் காலத்தில் நாடு முழுவதும் 250க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டதாகவும் அவர்களில் 190 குழந்தைகள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மத்திய அரசு தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ள பதிலில் கரோனா காலத்தில் கட்டாயப் பணிகளுக்கு குழந்தைகள் உட்படுத்தப்பட்டதற்கான தரவுகள் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | சாதியப் பாகுபாடு: யோகி அமைச்சரவையிலிருந்து அமைச்சர் ராஜிநாமா?
உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து பிகாரிலிருந்து 13 குழந்தைகளும், ஹரியாணாவிலிருந்து 16 குழந்தைகளும், ராஜஸ்தானிலிருந்து 7 குழந்தைகளும், பஞ்சாப் மற்றும் மத்தியப்பிரதேசத்திலிருந்து தலா 5 குழந்தைகளும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கரோனா பொதுமுடக்கக் காலத்தில் 2 குழந்தைகள் கடத்தப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க நிர்பயா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஸ்மிருதிராணி தெரிவித்தார்.