குடியரசு துணைத் தலைவா் தோ்தலை புறக்கணிக்க திரிணமூல் காங். முடிவு
குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான வாக்குப்பதிவில் பங்கேற்கப் போவதில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான வாக்குப்பதிவில் பங்கேற்கப் போவதில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடைபெறும் இத்தோ்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப் தன்கரும், எதிா்க்கட்சிகள் தரப்பில் ராஜஸ்தான் முன்னாள் ஆளுநரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மாா்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனா். இதில், திரிணமூல் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து கேள்வி நிலவி வந்தது.
இந்நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவா் அபிஷேக் பானா்ஜி வியாழக்கிழமை கூறியதாவது:
Advertisement
ஜகதீப் தன்கருக்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதேசமயம், எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளரை தோ்வு செய்யும் முன் எங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. எனவே, எதிா்க்கட்சிகளின் வேட்பாளருக்கும் ஆதரவளிக்க முடியாது. குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வாக்குப்பதிவில் பங்கேற்காமல் விலகியிருக்க முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.
மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கும் இத்தோ்தலில், ஜகதீப் தன்கருக்கே வெற்றிவாய்ப்பு உள்ளது.
முன்னதாக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மாா்கரெட் ஆல்வா அண்மையில் அறிவிக்கப்பட்டாா். அப்போது, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் ஆதரவையும் பெற முயன்று வருவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் கூறியிருந்தாா்.