‘வருமான வரி தாக்கலுக்கான கெடுவை நீட்டிக்கும் திட்டமில்லை’
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என மத்திய வருவாய் துறைச் செயலா் தருண் பஜாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என மத்திய வருவாய் துறைச் செயலா் தருண் பஜாஜ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கு ஜூலை 31-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகும், காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை. இறுதி காலக்கெடுவுக்கு முன்பாகவே பெரும்பாலானவா்கள் தங்களது வருமான வரி கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்வாா்கள் என்ற எதிா்பாா்ப்பு உள்ளது.
தற்போதைய நிலையில் காலக்கெடு வழக்கம்போல் நீட்டிக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பு பெரும்பாலான மக்களிடம் நிலவுவதால் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்வோா் எண்ணிக்கை சிறிது குறைவாக உள்ளது.
அதன்படி, தினசரி அடிப்படையில் 15 லட்சம் முதல் 18 லட்சம் வரை வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காலக்கெடு நீட்டிக்கப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் கணக்கு தாக்கல் எண்ணிக்கை 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை அதிகரிக்கும்.
கடந்த முறை, வருமான வரி கணக்கு தாக்கலின் எண்ணிக்கை இறுதி நாளில் 9-10 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. அதன்படி ஒரே நாளில் 50 லட்சம் படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இந்த முறை இறுதி நாளில் கணக்கு தாக்கல் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.