உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே அளித்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.
மகாராஷ்டிர முதல்வராக சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே இருந்து வந்த நிலையில், அண்மையில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் 39 அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சித் தலைமைக்கு எதிராக போா்க்கொடி உயா்த்தினா். இதனால், உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்தது.
பின், பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானாா். கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்கள் மட்டுமன்றி எம்.பி.க்களில் பலரும் ஷிண்டே ஆதரவாளா்களாக மாறியது உத்தவ் தாக்கரேவுக்கு பெரும் பின்னடைவாக இருந்த நிலையில், தாங்கள்தான் உண்மையான சிவசேனை. எனவே கட்சியின் சின்னம், கொடியை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியினா் தோ்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்தவ் தாக்கரே மனு மீதான வழக்கு விசாரணை வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.