புது தில்லி: நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அமலாக்கத் துறை நடத்திய 3-ம் நாள் விசாரணை நிறைவடைந்துள்ளது.
தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்திற்கு காலை 11 மணிக்கு காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியுடன் வந்தார். பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சோனியா காந்தி செல்லும் சாலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஏற்கெனவே, இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 21ஆம் தேதி 2 மணிநேரமும், நேற்று 6 மணிநேரமும் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 3-வது நாளாக இன்று ஆஜரான சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்திய நிலையில், மொத்தம் 3 நாள்களிலும் சுமார் 11 மணி நேரம் சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரித்துள்ளது.
சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகையை வெளியிடும் அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப்பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்தப் பண மோசடி தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.