புது தில்லி: இந்தியாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் அளவு கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 20 சதவீதம் அளவுக்குச் சரிந்துள்ளது.
அதாவது, உலக நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் அளவு 20 கோடி கிலோவாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதாவது, 2017-18 ஆம் நிதியாண்டு முதல் 2021 - 22ஆம் நிதியாண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் அளவு 25 கோடியே 60 லட்சம் கிலோவிலிருந்து தற்போது 20 கோடி கிலோவாகக் குறைந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
கடந்த ஒரு சில ஆண்டுகளாக தேயிலை ஏற்றுமதி வெகுவாக சரிவை கண்டுள்ளது. தேவையான கண்டெய்னர்கள் கிடைக்காதது, சரக்குக் கப்பல் அட்டவணைகளில் மாற்றம், பொதுமுடக்கம், வர்த்தகத்தில் காணப்படும் நிலையற்ற தன்மை போன்றவை, உலகளவில் வர்த்தகத்தை பாதித்துள்ளதே, தேயிலை ஏற்றுமதியில் ஏற்பட்ட தேக்கத்துக்கும் காரணமாகப் பார்க்கப்படுகிறது என்று மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் அனுபிரியா படேல் மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட தேயிலை ஏதேனும் திரும்ப அனுப்பப்பட்டதா என்ற கேள்விக்கு அப்படி எதுவும் நிகழவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
நாட்டில் தேயிலை உற்பத்தித் துறையில் சுமார் 12 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். உலகளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா 23 சதவீத உற்பத்தியைக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.