5ஜி அலைக்கற்றை: இன்று 4-ஆவது நாள் ஏலம்
அதிவேக இணைய சேவை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் (ஜூலை 29) நடைபெற உள்ளது.
அதிவேக இணைய சேவை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் (ஜூலை 29) நடைபெற உள்ளது.
இதுவரை 16 சுற்றுகள் முடிந்துவிட்ட நிலையில், மொத்தம் ரூ. 1,49,623 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைத் தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை கூறுகையில், ‘5ஜி அலைக்கற்றை ஏலம் 3 தினங்களில் 16 சுற்றுகள் நிறைவுற்றுள்ளது. மூன்று நாள்கள் முடிவில் நிறுவனங்கள் ரூ.1,49,623 கோடிக்கு அலைக்கற்றையை ஏலம் எடுக்க விண்ணப்பங்களைச் சமா்ப்பித்துள்ளன. ஏலம் நான்காவது நாளான வெள்ளிக்கிழமையும் தொடர உள்ளது. 5ஜி சேவையை கிராமப்புறங்களுக்கும் எடுத்துச்செல்ல நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன’ என்றாா்.
அதிவேக இணைய சேவை, மிக விரைவான பதிவிறக்கம் உள்ளிட்ட சேவைகளை அளிக்கும் இந்த 5ஜி அலைக்கற்றை ஏலம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி எண்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்றுள்ளன.