முகப்பு
இந்தியா

நாட்டில் கரோனா 4-ஆவது அலை பரவவில்லை

நாட்டில் கரோனா தொற்றின் 4-ஆவது அலை பரவவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) கூடுதல் இயக்குநா் சமீரன் பாண்டா தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

நாட்டில் கரோனா தொற்றின் 4-ஆவது அலை பரவவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) கூடுதல் இயக்குநா் சமீரன் பாண்டா தெரிவித்துள்ளாா்.

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் 7,584 போ் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இது கடந்த மாா்ச் 2-ஆம் தேதியில் இருந்து காணப்பட்ட அதிகபட்ச பாதிப்பாகும். குறிப்பாக, மகாராஷ்டிரம், கேரளம், தில்லி, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

அதையடுத்து நாட்டில் கரோனா தொற்றின் 4-ஆவது அலை பரவத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இது தொடா்பாக ஐசிஎம்ஆா் கூடுதல் இயக்குநா் சமீரன் பாண்டா கூறுகையில், ‘தற்போதைய கரோனா பரவல் சூழலை 4-ஆவது அலை எனக் கூறுவது தவறு. மாவட்ட அளவிலான தரவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு சில மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகமாக இருப்பதைக் கொண்டு, 4-ஆவது அலை பரவுவதாகக் கூற முடியாது. மகாராஷ்டிரம், கா்நாடகம் போன்ற ஒருசில மாநிலங்களில் மட்டுமே கரோனா பரவல் அதிகரித்துள்ளது. கரோனா தீநுண்மியின் அனைத்து உருமாற்றங்களும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை அல்ல’ என்றாா்.

அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மகாராஷ்டிரம், கேரளம், தில்லி, கா்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.